செய்திகள்

இந்திய எல்லை அருகே பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே அணை கட்டும் சீனா

வெளியான புகைப்படங்கள்

டெல்லி, ஜன. 20–

இந்திய எல்லைக்கு அருகே பிரம்மபுத்திரா ஆற்றில் சீனா அணை கட்டும் செயற்கைகோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சீன எல்லையில் தொடங்கி இந்தியாவின் அசாம் மாநிலம் வழியாக பிரம்மபுத்திரா ( சீன பெயர் – யார்லாங் ஜாக்போ) ஆறு பாய்ந்து வருகிறது. திபெத்தில் இருந்து பாயும் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே சீனா அணை கட்டுவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு திட்டமிட்டது. அப்போது சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டிருந்தது. 14-வது ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அணை கட்டும் திட்டம் இருப்பதாக அப்போது சீனா கூறியது.

தற்போது இந்திய எல்லைக்கு அருகே பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே சீனா அணை கட்டும் செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்தியா, நேபாளம் ஆகிய இரண்டு நாடுகள் எல்லைகள் பகிர்ந்து கொள்ளும் ‘லைன் ஆப் கண்ட்ரோல்’ பகுதிக்கு அருகே இந்த அணை கட்டப்படுவது புகைப்படங்கள் மூலம் தெரியவருகிறது.

உள்கட்டமைப்பு வசதி

இந்த அணையின் மூலம் இரண்டு விதமான பயன்களை சீனா பெறமுடியும் என்று கூறப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியத்தில் உள்ள கிராமங்கள் வளர்ச்சியடையும், நாட்டின் உள்கட்டமைப்பு வசதிக்கு பயன்படுத்த முடியும் என இரண்டு பயன்களை பெறமுடியும் என்று கூறப்படுகிறது.

சீனா அணை கட்டும் செயற்கைகோள் புகைப்படங்களை இண்டெல் ஆய்வகத்தின் புவிசார் நுண்ணறிவு ஆய்வாளர் டேமியன் சைமோன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘இந்திய எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இந்த அணை அமைக்கப்பட்டு வருகிறது. அணையின் நீளம் 350 மீட்டரிலிருந்து 400 மீட்டர் வரை இருக்கக்கூடும். தற்போது கட்டப்பட்டு வருவது இந்த படங்கள் மூலம் தெரிகிறது’ என சைமோன் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *