டெல்லி, மே 7–
பாலியல் புகார் மற்றும் ஆபாச வீடியோக்களில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் முதல்முறையாக பிரதமர் மோடி மௌனம் கலைத்தார்.
பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ரேவண்ணா மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார், பிரஜ்வல் எடுத்து வைத்திருந்த 3000 க்கும் மேலான ஆபாச வீடியோக்கள் ஆகியவை தேசிய அளவிலான அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
வாய் திறந்த மோடி
இந்நிலையில், பாஜக ஆதரவுடன் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. கூட்டணி கட்சியினர் மீதான குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், ஆங்கில தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்த பிரதமர் மோடி, இந்த விவகாரம் தொடர்பாக முதன்முறையாக பேசியுள்ளார். அதில், “பிரஜ்வலை இந்தியா அழைத்துவந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என பிரதமர் உறுதி அளித்துள்ளார். ஆனால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, பிரஜ்வல் ரேவண்ணா குறித்து நாடே பேசியபோதும், பிரதமர் மோடி அவருக்கு வாக்கு சேகரித்துக்கொண்டு இருந்தார் என்று சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.