மும்பை, மே 8–
நடிகர் கருணாஸ் திரைப்பட நடிகையம் பாஜக வேட்பாளருமான நவ்நீத் கவுர் ஜெய்ஸ்ரீராம் எனச் சொல்லாவிட்டால்
பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், கடந்த தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தனி தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற கருணாஸ் பட (அம்பாசமுத்திர அம்பானி திரைப்படம்) நடிகை நவ்நீத் ராணா கவுர், அண்மையில் பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அதே தொகுதியில் நவ்நீத்துக்கு அக்கட்சியின் சார்பில் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அத்தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் நவ்நீத்.
சர்ச்சைப் பேச்சு
இந்த நிலையில், “ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல விரும்பாதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம்” என அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது வைரலாகி வருகிறது. கடந்த மே 5ஆம் தேதி, குஜராத்தில் இதுகுறித்து அவர் பேசியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அவர், “இது ஹிந்துஸ்தான். நீங்கள் ஹிந்துஸ்தானில் தங்க விரும்பினால், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால் பாகிஸ்தான் செல்லலாம்” என அவர் பேசியதாக வட இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அவர் பேசியதாகக் கூறப்படும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக அவர், “மோடி அலை இருப்பதாக மாயையில் இருக்க வேண்டாம்” என அவர் பேசியது வைரலான நிலையில், அதற்கு மீண்டும் பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.