சென்னை, டிச.8–
‘மிக்ஜாம்’ புயல் எதிரொலியாக சென்னையில் நடைபெற இருந்த பார்முலா–4 கார் பந்தயம் கால வரையரையின்றி எந்தத் தேதியும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியிருக்கும் 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் பார்முலா – 4 கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.இந்த கார் பந்தயம் டிசம்பர் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தீவுத்திடலில் இருந்து பிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணாசாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடல் வந்து சேரும் வகையில் கார் ரேஸ் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தமிழக அரவு 42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது. கார் பந்தயத்திற்காக சர்வதேச தரத்தில் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை முழு வீச்சில் நடைபெற்று வந்தன.இந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது.
பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் போட்டி வருகிற 15-ந்தேதி மற்றும் 16-ந்தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது. பார்முலா 4 கார் பந்தயம் தீவுத்திடலில் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.