திருப்பூர், ஏப். 6–
திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் பி.என்.ரோடு பிச்சம்பாளையம்புதூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆசிரியராக கருப்பசாமி (வயது 41) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் அவர், 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை, பள்ளியின் மாடிக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் மாணவியிடம் அந்த ஆசிரியர் தவறாக பேசியதுடன், தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றதும் மாணவி பெற்றோரிடம் கூறி உள்ளார்.இதையடுத்து மறுநாள் பள்ளிக்கு சென்ற மாணவியிடம் அந்த ஆசிரியர், பள்ளியில் நடந்ததை ஏன் பெற்றோரிடம் சென்று கூறினாய் என்று கேட்டதாக தெரிகிறது. இதனால் மாணவி பள்ளி வளாகத்தில் நின்று அழுது கொண்டிருந்தார்.இதுபற்றி தகவலறிந்ததும் மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் பள்ளி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவியின் சித்தி பள்ளிக்குள் சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியரை தாக்கியதாகவும் தெரிகிறது.
இது குறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் சரக போலீஸ் உதவி கமிஷனர் நல்லசிவம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து சென்று ஆசிரியர் மற்றும் மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து மாணவி சார்பில் கொங்குநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் ஆசிரியர் மற்றும் மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து ஆசிரியர் கருப்பசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.