செய்திகள்

மயிலாடுதுறையிலிருந்து இடம் பெயர்ந்த சிறுத்தை: 6 வது நாளாக தேடுதல் தீவிரம்

மயிலாடுதுறை, ஏப். 08–

மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தை முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மயிலாடுதுறையில் கடந்த 2-ம் தேதி, செம்மங்குளம் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டது. இதுகுறித்து மக்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டன.

சிறுத்தையின் புகைப்படம் சென்சார் கேமராவில் பதிவானது. அந்த புகைப்படத்தை மயிலாடுதுறை மாவட்ட வனத்துறையினர் வெளியிட்டனர். இதனையடுத்து அந்த பகுதிகளில் கூண்டுகள் வைக்கப்பட்டு சிறுத்தை பிடிக்கும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தினர். எந்த கூண்டிலும் சிறுத்தை சிக்காத நிலையில் மயிலாடுதுறை ரெயில் நிலையம் அருகே காவிரி ஆற்றுப்பாலம் கீழே சிறுத்தையின் காலடி தடங்கள் இருப்பதாக கூறப்பட்டது.

6 வது நாளாக தேடுதல்

இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் ரெயில் நிலையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த பகுதியில் சிறுத்தையின் கால்தடங்கள் எதுவும் தெரியாத நிலையில் காவிரி கரையில் முடியுடன் கூடிய கழிவை வனத்துறையினர் கைப்பற்றினர். இது சிறுத்தையின் கழிவு போன்று இருப்பதால் அதை மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இந்த நிலையில், மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தை முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கால் தடத்தை ஆய்வு செய்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதனையடுத்து தொடர்ந்து, 6 வது நாளாக சிறுத்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *