கள்ளக்குறிச்சி, அக். 30–
நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள இரவார் கிராமத்தை சேர்ந்தவர் ரவி, விவசாயி. இவரது மகள் பைரவி (18). இவர் அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து முடித்துள்ளார். தொடர்ந்து மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை எழுதினார். ஆனால் அதில் குறைந்த மதிப்பெண் பெற்றார். இதனால் பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த அவர் கடந்த வாரம் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்தார். பின்னர் மருந்து குடித்ததை வீட்டில் கூறாமல் வயிற்று வலி என்று பெற்றோரிடம் கூறி வந்தார். இதையடுத்து அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று மதியம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பரிதாபமாக இறந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.