சென்னை, டிச. 10–
சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் நாட்டின் 50வது வந்தே பாரத் ரெயில் தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த ரெயிலை இம்மாத இறுதியில் ரெயில்வே வாரியத்திடம் வழங்க ஐசிஎப் திட்டமிட்டுள்ளது.
2019-ல் வந்தே பாரத் ரயில் சேவையை டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, டெல்லி-காத்ரா, காந்திநகர்-மும்பை என பல்வேறு வழித்தடங்களில் 45-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
தெற்கு ரெயில்வேயில் சென்னை-கோவை, சென்னை-மைசூரு, சென்னை-விஜயவாடா, சென்னை – திருநெல்வேலி, திருவனந்தபுரம் – காசர்கோடு உள்ளிட்ட வழித் தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.
இதையடுத்து, அதிக அளவில் வந்தே பாரத் ரெயிலை தயாரித்து வழங்க ஐசிஎப்-க்கு ரெயில்வே வாரியம் அறிவுறுத்தியது. இதையடுத்து, வந்தே பாரத் ரெயில் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை ஐசிஎப் ஆலையில் 50வது வந்தே பாரத் ரெயில் தயாரிப்பு பணி நடைபெறுகிறது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:–
வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. எனவே, சென்னை ஐசிஎப் 2023-24-ம் நிதியாண்டில் 736 வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. வாரத்துக்கு 2 அல்லது 3 வந்தே பாரத் ரெயில்களை தயாரித்து வழங்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தலா 16 பெட்டிகளைக் கொண்ட 46 வந்தே பாரத் ரெயில்கள் அல்லது தலா 8 பெட்டிகள் கொண்ட 92 வந்தே பாரத் ரெயில்களைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சென்னை ஐசிஎப் ஆலையில் 50வது வந்தே பாரத் ரெயில் தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இம்மாத இறுதிக்குள் இந்த ரயிலை தயாரித்து வழங்குவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.