சென்னை, ஏப். 01–
தமிழிசை சவுந்திரராஜனை ஆதரித்து வாக்கு கேட்கும் பாஜகவினர், வாரிசு அரசியல் பற்றி பேச அருகதை உள்ளதா? என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்.
தென்சென்னை தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரத்தில் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:–
பாஜகவின் உண்மை முகம்
தென்சென்னையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசிய போது, பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மிகப்பெரிய தலைவரான குமரி அனந்தனின் மகள் என்று பேசியிருக்கிறார். இங்கே இப்படி பேசி விட்டு, கோவைக்கு சென்று வாரிசு அரசியல் பற்றி பேசுகிறார். எங்கு பார்த்தாலும் வாரிசுகளாக நிற்கிறார்கள் என்கிறார். இதுதான் பா.ஜ.க.வின் உண்மையான முகம்.
தமிழிசை சவுந்தரராஜன் குறித்து தெலுங்கானா மக்களிடமும், புதுச்சேரி மக்களிடமும் கேட்டால் சொல்வார்கள். ஒரு மாநில கவர்னரை முதலமைச்சர் வரவேற்க போகாமல் மறுப்பு தெரிவித்த சம்பவம் முதலில் நடந்தது தெலுங்கானாவில்தான். இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.