சம்பவ இடத்தில் என்ஐஏ நேரில் விசாரணை
திருவனந்தபுரம், அக்.30–
கேரளாவில் குண்டு வெடிப்பு நடந்த எர்ணாகுளம் களமசேரி பிரார்த்தனை கூட்டம் நடைபெற்ற மையத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடன் மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று ஆலோசனை நடத்தினார்.
கேரளா எர்ணாகுளம் களமசேரியில் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ பிரிவினர் பிரார்த்தனை கூட்டத்தை நடத்தி வந்தனர். இந்தக் கூட்டத்தில் 2,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். சிலுவைகள், உருவங்களை ஏற்காத, இறந்தவர்கள் உயிரோடு வருவார்கள் என்று நம்புகிற கிறிஸ்தவ பிரிவினர்தான் யெகோவா சாட்சிகள்.
நேற்று களமசேரி பிரார்த்தனையின் போது நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 12 வயது சிறுமி உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர். 50–க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டு வெடிப்புக்கு டொமினிக் மார்ட்டின் என்பவர் பொறுப்பேற்று போலீசில் சரணடைந்தார். இவரும் யெகோவாவின் சாட்சிகள் பிரிவைச் சேர்ந்தவர்தான்.
இந்த பிரிவில் 16 ஆண்டுகள் தாம் இணைந்திருந்ததாகவும் யெகோவாவின் சாட்சிகள் தேசதுரோகிகள் என்பதாலும் அவர்களை அழிக்கவே வெடிகுண்டு வைத்ததாகவும் டொமினிக் மார்ட்டின் வாக்குமூலம் கொடுத்தார். தற்போது டொமினிக் மார்ட்டின் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விவாதிக்க கேரளாவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் இன்று கூட்டினார். இந்தக் கூட்டத்தில் கேரளாவின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதனிடையே வெடிகுண்டு வெடித்த இடத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் (என்.ஐ.ஏ) இன்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.