செய்திகள்

வளமான இந்தியாவை உருவாக்குவதற்கான வாய்ப்பை தவற விட்ட காங்கிரஸ்

25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன்: பிரதமர் மோடி பெருமிதம்

கயா, ஏப்.16–

நாட்டில் சுமார் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

பிகார் மாநிலம் கயாவில் இன்று நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:–

இந்த தேர்தலானது ‛வளர்ந்த இந்தியா’வுக்காகவும், பீகாரின் வளர்ச்சிக்காகவும் நடக்கிறது. நமது அரசியல்சாசனம் தூய்மையானது. சாசனத்தை உருவாக்கியவர்கள் வளர்ச்சியடைந்த இந்தியா குறித்து கனவு கண்டனர். ஆனால், பல ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியானது, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வாய்ப்பை தவற விட்டு விட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய அம்பேத்கர் மட்டும் இல்லாவிட்டால், ஏழைக் குடும்பத்தில் பிறந்த நான், நாட்டின் பிரதமராகியிருக்க முடியாது. மக்களின் ஆசியே எனக்கு இந்தப் பதவியை வழங்கியுள்ளது.

பீகாரில் எதிர்க்கட்சிகளுக்கு எந்தக் கொள்கையும் இல்லை. அவர்கள் ஓட்டு சேகரிக்க சென்றால், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் செய்த பணிகளை கூறியே ஓட்டுக் கேட்கின்றனர். நிதீஷ்குமார் மற்றும் மத்திய அரசு செய்த பணிகளுக்கான பெருமைகளை எதிர்க்கட்சிகள் எடுத்துக் கொள்கின்றன. இதனை மக்கள் அறிந்து வைத்து உள்ளனர்.

பீகாரை ஆண்ட ராஷ்ட்ரிய ஜனதா ஆட்சியில், ஊழல் செய்வதே ஒரு தொழில்போல எங்கும் பரவியிருந்தது. அந்த அரசு பிகாருக்குக் கொடுத்தது இரண்டுதான் ஒன்று காட்டாட்சி, மற்றொன்று ஊழல். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஒரு புரட்சி நடந்துள்ளது. அது பற்றி பெரியளவில் யாரும் பேசப்படவும் இல்லை, விவாதிக்கப்படவும் இல்லை. சமூக நீதி என்ற பெயரில், காங்கிரஸ் கட்சியும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் அரசியல் செய்தன. நான் நாட்டில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *