அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
சென்னை, அக்.21-
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை இரவிலும் கண்டு மகிழும் வகையில் ரூ.11.98 கோடி மதிப்பில் லேசர் ஒளியூட்டம் மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
சென்னை, வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனர் காகர்லா உஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசியதாவது:-
இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை சுற்றுலாத் தலமாக முன்னேறி உள்ளது. கொரோனாவிற்கு பிறகு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2023ல் ஆகஸ்டு மாதம் முடிய 8 மாதங்களில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 545 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2023ல் ஆகஸ்டு மாதம் முடிய 8 மாதங்களில் 19 கோடியே 11 லட்சத்து 87 ஆயிரத்து 624 ஆக உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை இரவிலும் கண்டு மகிழும் வகையில் ரூ.11.98 கோடி மதிப்பீட்டில் லேசர் தொழில்நுட்ப உதவியுடன் ஒளியூட்டம் மேற்கொள்ளும் பணிகளும், முட்டுக்காடு படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தனியார் மற்றும் பொது பங்களிப்பு திட்டத்தின் கீழ் 200 பேர் அமரும் வகையிலான 2 அடுக்குகள் கொண்ட மிதவை உணவக கப்பல் அமைக்கும் பணியும், மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கிற்காக தனியார் மற்றும் பொது பங்களிப்பு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்திலான ஒளிரும் பூங்கா அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
“தென்னிந்தியாவின் ஸ்பா” என்று அழைக்கப்படும் குற்றாலத்தை ரூ.11.34 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுத்தும் பணிகளும், கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை மற்றும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி ஆகிய சுற்றுலாத்தலங்களில் ரூ.7.09 கோடி மதிப்பீட்டில் சுற்றுலாத்தல மேம்பாட்டு பணிகளும், தூத்துக்குடி கடற்கரையை ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் நீர் விளையாட்டுக்கள் மற்றும் கடற்கரை விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட கடற்கரை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் குறித்த காலத்திற்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் சுற்றுலா அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.