30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு
மேட்டுப்பாளையம், டிச. 10–
குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் கடந்த 2 நாட்களில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட குளம், குட்டை, தடுப்பணைகள் நிரம்பி சாலைகளை மழை நீர் மூழ்கடித்து செல்கின்றன.
குன்னூர் பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் பனிமூட்டமும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.நேற்றிரவு இரவு முதல் குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
இந்த மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. 30க்கும் அதிகமான கிராமங்களில் மின்சாரம் இல்லாததால் அந்த பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
இந்நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம் – -குன்னூர் மலைப்பாதையில் பெய்த தொடர் மழையின் காரணமாக பர்லியாறு போலீஸ் சோதனை சாவடி அருகே மண்சரிவு ஏற்பட்டது. ஆங்காங்கே சில இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்தன. தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த ஊழியர்கள் பாதையில் சரிந்து கிடந்த மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
3 கி.மீ. வாகனங்கள்
இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் இருந்து மலை காய்கறிகளை ஏற்றி வந்த லாரிகள் மற்றும் அரசு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் 3 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
இதனால் இப்பகுதியில் 3 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு காரில் வந்தார். மண் சரிவு காரணமாக அவரது காரும் போக்குவரத்தில் மாட்டி கொண்டது. 1½ மணி நேரத்துக்கும் மேலாக அவர் காரில் காத்திருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து, மண்சரிவினை ஒருபுறமாக அகற்றி, மத்திய அமைச்சரின் கார் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்தனர். தொடர்ந்து மண்சரிவினை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு குன்னூர் வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.