சேலம், டிச.18–
எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 5 இடங்களில் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அம்மா மினி கிளினிக்கை திறந்து வைக்கிறார்.
கடந்த 16–ந் தேதி முதல் சேலத்தில் முதலமைச்சர் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். இன்று 2 இடங்களில் மினி கிளினிக்கை திறந்து வைத்தார்.
நாளை பெரிய சோரகை சென்றாய பெருமாள் கோவிலில் மண்டல பூஜையில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார். பின்னர் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீரங்கனூர், இருப்பாளி, வேலநாயக்கன்பாளையம், ஆலச்சிபாளையம், எட்டி குட்டைமேடு ஆகிய 5 இடங்களில் மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். தனது சொந்த ஊரான சிலுவம்பாளையம் செல்லும் அவர் அங்கு ஒரு மினி கிளினிக்கை திறந்து வைக்கிறார். ஆலச்சிபாளையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார், நலத்திட்ட உதவி வழங்குகிறார்.
தொடர்ந்து எடப்பாடியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு வரும் அவர் அண்ணா தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.