செய்திகள்

வீராணம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு: சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கல்

சிதம்பரம், அக்.8–

வீராணம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால், சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் முழுகொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

சென்னைக்கு இந்த ஏரியில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீரே வீராணம் ஏரிக்கு முக்கிய நீர் ஆதாரம் ஆகும். மேட்டூர் அணை நீர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும் மழைக்காலங்களில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் இருந்து காட்டாறுகள் மூலம் ஏரிக்கு நீர் வந்து சேரும். மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில் கடந்த மாதம் கீழணையில் இருந்து 8 அடி தண்ணீர் ஏரிக்கு தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டதால் ஏரியின் நீர் மட்டம் 46 அடி வரை உயர்ந்தது.

இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததாலும், கீழணையில் தண்ணீர் இல்லாததாலும், தொடர்ந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வந்ததாலும் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக சரிந்தது.

ஏரியின் நீர் மட்டம் தற்போது 41.85 அடியாக உள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 54 கன அடி நீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. விவசாய பணிகளுக்காக வினாடிக்கு 200 கன அடியும், வி.என்.எஸ்.எஸ். வடிகால் மதகு வழியாக விவசாய பணிகளுக்கு 30 கன அடியும் என மொத்தமாக வினாடிக்கு 284 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் ஏரியின் நீர் மட்டம் குறைந்து கொண்ட வருகிறது. இன்னும் ஒரு வாரம் வரை தான் ஏரியில் தண்ணீர் இருக்கும் என கூறப்படுகிறது . இதனால் சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர சிதம்பரம் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *