மும்பை, பிப்.1-
வங்கி செயல்பாடுகளை நிறுத்த பேடிஎம் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பேடிஎம் நிறுவனம் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால், வருகிற 29ந் தேதிக்கு பின்னர் பேடிஎம் நிறுவனம் தனது வங்கி செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கக்கூடாது. டெபாசிட் மற்றும் டாப்–அப் பணம் பெறுவது கூடாது. வாடிக்கையாளர்களிடம் இருந்து வாலட்களில் பணம் பெறுவதோ, வாகனங்களுக்கு சுங்கவரி செலுத்தும் அட்டையான பாஸ்டேக், தேசிய மொபைலிட்டி கார்டுகள் மூலம் பணம் பெறுவதோ கூடாது. அதே நேரம் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு மற்றும் பாஸ்டேக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க எந்த வித தடையும் விதிக்கக்கூடாது. வாலட்டுகளில் ஏற்கனவே இருக்கும் பணத்தை வாடிக்கையாளர்கள் எடுக்க தடை இல்லை.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.