ஒட்டாவா, மே 4–
கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு உள்ள கனட போலீசார், அவர்களுக்கும் இந்திய அரசுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜார் கொலை செய்யப்பட்டார். இதில், இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு உள்ளதாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி இருந்தார். இதனை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த கரன் பிரார் (வயது 22), கமல்ப்ரீத் சிங் (வயது 22), கரன்ப்ரீத் சிங் (வயது 28) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அல்பெர்டா என்ற பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி உள்ளதாக கூறியுள்ள போலீசார், அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். மேலும், இவர்களுக்கும், இந்திய அரசுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்து உள்ளனர்.