சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
சிங்கப்பூர், அக். 28–
கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சிங்கப்பூர் நீதிமன்றம், 26 வயதுள்ள இந்தியர், சின்னய்யா என்பவருக்கு 16 ஆண்டுகள் சிறையும் 12 சவுக்கடிகளும் தீர்ப்பாக வழங்கியுள்ளது.
சிங்கப்பூரில் 2019 ஆம் ஆண்டு மே 4-ம் தேதி தூய்மை பணியாளராகப் பணியாற்றிய இந்தியரான சின்னய்யா என்பவர், பின்னிரவு நேரத்தில் கல்லூரி மாணவி ஒருவரைப் பின்தொடர்ந்து சென்று, தாக்கி அவரை மறைவான காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
4 ஆண்டுகளாக வழக்கு
முகமெல்லாம் காயங்களும் சிராய்ப்புகளும் கீறல்களும் கழுத்து நெறிக்கப்பட்ட தடயங்களுடன் அந்தப் பெண் அவரது காதலரால் கூட அடையாளம் காட்ட முடியாத நிலையில் மீட்கப்பட்டார். அடுத்த நாளே சின்னய்யா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு 4 ஆண்டுகளாக நடைபெற்ற வந்தது. இதற்கு காரணம் சின்னய்யாவின் மனநிலையைச் சோதிக்க பல சுற்று உளவியல் மதிப்பீடு செய்யப்பட்டது என நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது.
குற்றத்தின் ஆழத்தைக் கருத்தில் கொண்டும் ஜுலை 13, 2023-ல் மாணவியின் வாக்குமூலமான, துர்கனவுகளும் அன்று நடந்த நினைவுகளும் தற்கொலை எண்ணங்களும் தொடர்ச்சியாக வருவதாக அவர் குறிப்பிட்டதைக் கருத்தில் கொண்டும் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 12 சவுக்கடிகளும் கோரப்பட்டன. இந்த நிலையில் அவருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும் 12 சவுக்கடிகளும் சிங்கப்பூர் நீதிமன்றத்தால் தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது.