புதுடெல்லி, டிச.1-
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஒரு நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜி.டி.பி) அளவை பொறுத்து, அதன் பொருளாதாரத்தின் நிலை குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு 2023–24 நிதியாண்டின் 2வது காலாண்டில், அதாவது ஜூலை–செப்டம்பர் காலாண்டில் 7.6 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இது பொருளாதார ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகளை விட அதிகம் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன. குறிப்பாக, சிமெண்டு, நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள் ஆகிய துறைகள் அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 2022–23 நிதியாண்டின் 2-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்துள்ளது இந்திய பொருளாதாரத்தின் வலிமையை காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2ம் காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி எண்கள், உலகளவில் இத்தகைய சோதனை நேரங்களுக்கு மத்தியில் இந்திய பொருளாதாரத்தின் மீள்தன்மை மற்றும் வலிமையைக் காட்டுகிறது. அதிக வாய்ப்புகளை உருவாக்கவும், வறுமையை விரைவாக ஒழிக்கவும், நமது மக்களுக்கு ‘வாழ்க்கையை எளிதாக்கவும்’ வேகமான வளர்ச்சியை உறுதிசெய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.