பெங்களூர், டிச.1–
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள 15 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வெளியேற்றப்பட்டனர். குழந்தைகள் பாதுகாப்பாக வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் பள்ளிக்கூடங்களில் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை கண்டுபிடித்தனர். அதேவேளை, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் ஒன்று மாநில துணை முதலமைச்சர் டிகே சிவக்குமாரின் வீட்டிற்கு எதிரே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 15 பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டலால் பெங்களூருவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
2022ல் இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் பெங்களூருவின் பல பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. விசாரணையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுவன், ஒரே நேரத்தில் பல மின்னஞ்சல்களை அனுப்பும் செயலி ஒன்றின் உதவியுடன் அந்த மிரட்டல்களை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. அதே மாதிரியான செயலியின் மூலம் இந்த மிரட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகக் போலீசார் தெரிவித்துள்ளனர்.