செய்திகள்

திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு

திருத்தணி, டிச. 11–

திருத்தணி முருகன் கோவில் மலைப் பாதையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மலைப்பாதையில் திருக்கோவிலுக்கு செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோவிலுக்கு செல்லும் மலைப் பாதை மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 5 ஆம் தேதி பாதை பக்கவாட்டில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் 20 அடி தூரத்திற்கு சாலை தடுப்பு சுவர்களும் இடிந்தது. இதனை அடுத்து அமைச்சர் ஆர். காந்தி நேரில் பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று நெடுஞ்சாலை துறை திருத்தணி கோட்ட உதவி பொறியாளர் அன்பரசு, கோயில் இணை ஆணையர் ரமணி ஆகியோர் முன்னிலையில் பொக்ளென் எந்திரங்கள் கொண்டு பக்கவாட்டில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது திடீரென்று மண் சரிவு மேலும் அதிகரித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை கோயிலுக்கு செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் தடை விதித்து திருக்கோயில் இணையானையர் ரமணி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து மலைக்கோயில் நுழைவு வாயிலில் பிரதான கேட் மூடப்பட்டு போலீசார் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முருகப் பெருமானை சுவாமி தரிசனம் செய்ய பேருந்து, வேன், கார்களில் வந்த பக்தர்களில் முதியோர், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் திருப்படிகள் வழியாக நடந்து செல்ல முடியாத நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *