செய்திகள் நாடும் நடப்பும்

தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் புதுத் திருப்பங்கள்


நாடும் நடப்பும் – ஆர்.முத்துக்குமார்


தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அன்பளிப்புத் தொகை பெறுவது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பது தான். உலகெங்கும் பல முன்னணி ஜனநாயக நாடுகள் தேர்தல் நிதி தரும் வழிமுறைகளை சட்டப்பூர்வமாகவே செயல்பட வைத்தும் வருகிறார்கள்.

இதனால் யார் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவு தருகிறார் என்பது வெட்டவெளிச்சமாக தெரிந்து விடும்! அதாவது அவர்களது ஆதரவாளர் ஜெயித்து விட்டால் நல்லது, ஆனால் எதிர் அணி ஜெயித்து விட்டால் நிதி உதவி செய்தவர்களின் நிலை பரிதாபமானதாகி விடும் அல்லவா?

இதை உணர்ந்து அப்படி நிதி தருபவர் பெயர் மறைக்கப்பட்டு இருக்கும். அதுபோன்ற ஒரு கட்டமைப்பை பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு தேர்தல் பத்திரங்கள் என்ற ஒரு கொள்கை முடிவை 2018ல் அமுல்படுத்தியது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் நடைமுறையை மத்திய அரசு 2018-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்கீழ், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கான பத்திரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட்டு வந்தது. ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துபவரின் பெயர் இடம்பெறத் தேவையில்லை.

தேர்தல் பத்திரங்களை பெறும் கட்சிகள், அவற்றை 15 நாட்களுக்குள் தங்கள் கணக்கில் வரவு வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்படும். அதன்படி, 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15 வரையில் வழங்கப்பட்ட 22,217 தேர்தல் பத்திரங்களில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்று கூறி, அந்த நடைமுறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து கடந்த பிப்ரவரி 15-ம் தேதி உத்தரவிட்டது. 2019 முதல் வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது. இதற்கு ஜூன் 30 வரை அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ மனு தாக்கல் செய்தது.

கடந்த 11-ம் தேதி அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்பிஐயின் கோரிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து தள்ளுபடி செய்ததோடு, தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 12-ம்தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தாக வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திர விவரங்களை எஸ்பிஐ வங்கி 12-ம் தேதி சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

அதில், ‘கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15-ம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பத்திரங்கள் பற்றிய விவரங்களை ஒளிவு மறைவின்றி அனைத்தையும் தேர்தல் ஆணையம் உடனே மக்கள் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். அதை ஏற்று ஸ்டேட் வங்கியும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து விட்டது.

அதை முத்திரை தாள் பதித்த மூடிய கவரில் அந்த ஆவணங்களை உச்சநீதிமன்றத்திடம் சமர்ப்பித்தும் உள்ளது.

அதில் இதுவரை 22 நிறுவனங்கள் ரூ.100 கோடி வரை கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் லாட்டரி நடத்தும் ஓர் பணக்காரர் ரூ.1368 கோடியை வாரி வழங்கி இருக்கிறார்.

அவரது நிறுவனங்கள் பொருளாதார குற்றவியல் அதிகாரிகளால் கடும் சோதனைக்கு உள்ளாகி கிட்டத்தட்ட ரூ.400 கோடி கொண்ட வங்கி கணக்குள் முடக்கப்பட்டும் இருக்கிறது.

தேர்தல் அன்பளிப்புகளில் அதிகப்படி தொகை பாரதீய ஜனதாவுக்கு சென்று இருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *