ஐதராபாத், டிச. 08–
தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ், உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த தெலங்கான மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதீய ராஷ்டிரிய சமிதி கட்சி பெரும் தோல்வி அடைந்தது. காங்கிரஸ் அபார வெற்றி பெற்றதால், சந்திரசேகர ராவ் முதலமைச்சர் பதவியையும் இழந்தார்.
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், சந்திரசேகர் ராவ் தனது பண்ணை வீட்டில் வழுக்கி விழுந்ததாக ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கிழே விழுந்ததில் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அவர் மகள் கவிதா தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:–
தந்தை லேசான காயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் கண்காணிப்பு மற்றும் உங்கள் அன்பு மூலம் அவர் விரைவில் குணமடைவார்’ என எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.