மாஸ்கோ, டிச. 08–
ரஷ்யாவின் அதிபர் தேர்தல் 2024 மார்ச் 17 ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேல்சபை தலைவர் வாலென்டினா மாட்வியென்கோ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ரஷ்ய அதிபர் தேர்தல் 2024 மார்ச் 17 ந்தேதி நடைபெறும் என ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் ஒருமனதாகவே அளித்துள்ளனர்.
புதினுக்கே வாய்ப்பு
இந்த தேர்தலில் விளாடிமிர் புதின் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விளாடிமிர் புதின் எந்த வித தகவலும் அளிக்கவில்லை.
ரஷ்யாவின் மிகவும் பிரபலமான எதிர்க்கட்சி அரசியல்வாதியான அலெக்ஸி நவல்னி சிறையில் இருப்பதால், அவரால் இத்தேர்தலில் போட்டியிட இயலாது. இதனால் புதின் போட்டியிட்டால் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவார் என கூறப்படுகிறது.
மேலும் அரசியல் சாசனத் திருத்தத்தின்படி விளாடிமிர் புதினால் 2036-ஆம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராகத் தொடர முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது