செய்திகள்

திருப்பத்தூர் அருகே ரெயில் மோதி அக்கா, தங்கை பலி

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது வயதானவர்களுக்கு நேர்ந்த சோகம்

திருப்பத்தூர், அக். 22–

திருப்பத்தூர் அருகே ரெயில் மோதி வயதான அக்கா, தங்கை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வலையாம்பட்டு ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் வசந்தா (வயது 67). இவரது மகன் பிரகாஷ். வசந்தாவின் சகோதரி ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பழைய காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாவித்திரி (வயது 66).

இவர்கள் 3 பேரும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆம்பூர் ரெயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்தனர். ரெயில் நிலையத்தில் டிக்கெட் வாங்க பிரகாஷ் கவுண்ட்டருக்கு சென்றார். அப்போது வசந்தாவும், சாவித்திரியும் ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது பிளாட்பாரத்தில் இருந்து 2-வது பிளாட்பாரத்திற்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அக்காள், தங்கை மீது மோதியது. இதில் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வசந்தா, சாவித்திரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வயதான அக்கா, தங்கை இருவரும் ஒரே நேரத்தில் இறந்த சம்பவம் அவர்களது உறவினர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த விபத்து குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *