டெல்லி, டிச. 21–
விசாரணைக்காக இன்று ஆஜராக, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்றும் நிராகரித்துள்ளதுடன், வழக்கறிஞர்கள் உரிய பதிலளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு நவம்பர் 2 ந் தேதி ஆஜராகுமாறு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், இது சட்டவிரோதமான விசாரணை எனக்கூறி கெஜ்ரிவால் அதை நிராகரித்தார்.
இன்றும் நிராகரிப்பு
இந்நிலையில், இன்று ஆஜராகுமாறு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. ஆனால், கெஜ்ரிவால் ஏற்கனவே தான் திட்டமிட்டபடி 10 நாள் விபாசனா தியானப் பயிற்சிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தியானப் பயிற்சிக்காக அவர் எங்கு சென்றுள்ளார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் சென்ற கெஜ்ரிவாலுக்கு அங்கு ஆம் ஆத்மி கட்சியினர் வரவேற்பளித்தனர் எனக் கூறப்படுகிது.
அதேநேரத்தில், அமலாக்கத் துறை அனுப்பியுள்ள சம்மன் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் வழக்கறிஞர்கள் ஆய்வு செய்து வருவதாகவும், சட்டரீதியாக பதில் அனுப்பி வைக்கப்படும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.