லண்டன், அக். 21–
இங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஆளும் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இங்கிலாந்தின் மிட் பெட்ஃபோர்ட்ஷைர், டாம்வொத் ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்ற தோதலில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி படு தோல்வியடைந்தது.
பெரும் பின்னடைவு
அந்த இரண்டு தொகுதிகளிலும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. பிரிட்டனில் பொதுத் தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் இடைத் தேர்தல்கள் அரசின் செயல்பாடுகள் குறித்து நடத்தப்படும் பொதுவாக்கெடுப்பாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் இந்த இரண்டு தொகுதிகளையும் தொழிலாளர் கட்சி கைப்பற்றியிருப்பது பிரதமர் ரிஷி சுனக்குக்கு பெரும் பின்னடைவு என்று கருதப்படுகிறது.