வை – மை வரும் நல்ல தலைமை பாகம் 6 – ஆர்.முத்துக்குமார்
ஏப்ரல் 19 தேர்தல் நாள் என்பதால் தமிழகம் எங்கும் அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் உச்சக் கட்டத்தை தொடரத் தயாராகி விட்டது
விலை குறைப்பு, சமூக நீதி, இலவசங்கள் என வழக்கமான தேர்தல் வாக்குறுதிகள் வாரி வழங்கப்பட்டும் வருகிறது. பல ஆண்டுகளாக தரப்பட்டு வரும் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானது கல்வி சார்ந்தது. இது தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சிக்கு வித்திட்ட சமாச்சாரம் என்பதை நாடே அறியும்.
இலவச மதிய உணவு, அதைப் பின்னர் சத்தான மதிய உணவாக உயர்த்த முட்டை, கீரை மற்றும் காய்கறி உடன் தரப்பட்டது.
சிறுவர்கள் பள்ளி நாட்களில் பசியின்றி ஆரோக்கியத்துடன் வளரவும் அனுதினமும் பள்ளிக்கு வந்து படிக்க ஆர்வத்தை தந்த ஒரு சமாச்சாரம் என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது.
மிக பின்தங்கிய புழுதி படிந்த கிராமங்களில் குடும்பத்தாருக்கு இருந்த ஒரே வேலைவாய்ப்பு காட்டிற்கு சென்று முட்செடிகளை அகற்றுவதும் அடுப்பு எரிய சுள்ளிகளை தலைச்சுமையாய் கொண்டு வரும் நிலை இருந்தது.
அப்படிப்பட்ட வேலைகளை அதிகாலையியே சென்று செய்தால் தான் பகல்நேர வெப்பத்தின் கொடுமையில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்!
இந்தப் பணிகளுக்கு இடையே வீட்டில் உள்ள பிள்ளைகளை ஆரோக்கியமாக வளர, உணவு சமைத்துக் கொடுக்க பண வசதியோ, நேர வசதியோ இருந்து இருக்காது.
அதைப் புரிந்து கொண்டு தான் முதல்வர் காமராஜர், பின்னர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி தற்போது மு.க.ஸ்டாலின் வரை வாழையடி வாழையாக தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
குறிப்பாக மகளிர் கல்வியில் தேசியப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கும் மாநிலம் தமிழகம் என்பது நமக்கெல்லாம் பெருமையே!
அது மட்டுமா? மகளிர் பணியாளர்கள் மிக அதிகமாக இருக்கும் மாநிலமும் தமிழகம் தான். தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், மார்க்கெட்டிங் பிரிவுகளிலும் தமிழகத்தில் உள்ள நிறுவனங்களில் பெருவாரியான சதவீதம் பெண்களே அமர்த்தப்பட்டும் இருக்கிறார்கள்.
நமது பெரிய நகரங்களான சென்னை, கோவையில் வெளிமாநில ஊழியர்கள் பெரிய சதவீதம் படையெடுத்து வருவதை அறிவோம். ஆனால் தமிழகம் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட மாநிலம் ஆகும்.
கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரை, விவசாயத்தை நம்பி இருக்கும் கிராமங்களில் இருந்து பல ஆயிரம் இளைஞர்கள் வேலை காரணங்களுக்காக சென்னை அல்லது பிற மாநிலங்களுக்கு சென்று கொண்டிருப்பது அதிகரித்து வருவதாக பேசிய புள்ளி விவரம் சுட்டிக் காட்டுகிறது.
ஆகப் பின்தங்கிய கிராமங்களில் படித்த பெண்கள் அருகாமை நகரங்களாக இருக்கும் திருச்சி, மதுரை, நெல்லைப் பகுதிகளைத் தாண்டி வேலைக்காக செல்வது கோவை, சென்னை என்பதும் மெல்ல மாறி, வடமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்வதும் அதிகரித்து வருகிறது.
2022ல் தமிழக மகளீர் 15 லட்சம் பேர் இந்தியா முழுவதும் பெண் தொழிலாளர்களாக பதிவு செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
அவர்களில் பெரிய சதவீதம் மெல்ல குடும்பமாக பிற மாநிலங்களில் தங்கி விடுவார்கள். கல்விக்காக தமிழகம் செய்த முதலீடு அல்லவா வீரயமாகி விடுகிறது.
மேலும் தமிழகத்தில் 6 லட்சம் பெண் ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 70 சதவீதம் பேர் தென் மாவட்டங்களில் படித்து பட்டம் பெற்றவர்கள் ஆவர்.
இவர்களுக்கும் கை நிறைய சம்பளம் கிடைத்தால் தமிழகத்தை விட்டு புறப்பட்டு சென்று விடுவர்!
இதையெல்லாம் யோசித்து மத்திய மாநில அரசுகள் தமிழகத்தில் வேலைவாய்ப்பு புரட்சியைக் கொண்டு வர தீவிரமாக சிந்தித்து உடனடியாக செயல்படவும் வேண்டும்.
கிராமப்புற பணிகள் என்றவுடன் விவசாயம், கால்நடை, பின்னலாடை போன்ற பணிகள் தான் நம் கண் முன் தோன்றுகிறது.
இதுபற்றி பத்திய மாநில அரசுகள் தீவிரமாக விவாதிக்க வேண்டும்.
பணியாற்ற பெண்கள் இப்படி வெளி ஊர்களுக்கு சென்று தான் ஆக வேண்டும் என்ற நிலை தொடர்ந்தால் அது தமிழக பொருளாதாரத்திற்கு இறக்கி வைக்க முடியாத சுமையாக இருக்கும்.
கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க ஏற்ற துறைகளில் முதலில் நிற்பது விவசாயம், அங்கும் தொழில்நுட்ப புரட்சி அதிவேகத்தில் ஏற்பட்டால் பல ஆயிரம் பணிகள் உருவாகிட மகளிர் வெளி மாநிலங்கள் செல்வது குறைந்துவிடும் . அதில் தமிழகத்தின் வருங்கால முன்னேற்றங்கள் காத்திருக்கிறது.