சிங்கப்பூர், டிச. 19–
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வரும் நிலையில், 56,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்தது. சிங்கப்பூரில் மட்டும் டிசம்பர் மாதத்தில் தற்போது வரை சுமார் 56,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்காக சிங்கப்பூரில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
பொது முடக்கம்?
இதனையடுத்து கொரோனா கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக முக கவசம் அணிவது உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் சிங்கப்பூரில் இன்று முதல் கொரோனா பாதிப்பு விவரங்கள் அன்றாடம் வெளியிடப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் தற்போது கொரோனா பரவும் வேகத்தால் அந்நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதேநேரத்தில் மலேசியா அரசு உடனடியாக பொது முடக்கம் அமல்படுத்தப்படமாட்டாது என்றும் முக கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.