சென்னை, ஜன. 7–
இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சார இரு சக்கர வாகனங்களில் 70% தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகின்றன என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
தமிழகத்திற்கு உலக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) நடத்தப்படுகிறது
இந்த மாநாட்டில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது:
தொழில் துறையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. நாட்டிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மின்வாகன உற்பத்தி, ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல பிரிவுகளில் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சார இரு சக்கர வாகனங்களில் 70% தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகின்றன.
பெண்களுக்கு
பாதுகாப்பான மாநிலம்
ஏற்றுமதிக்கான குறியீட்டு எண்ணில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் சீராக வளர வேண்டும் என்பது முதல்-அமைச்சரின் இலக்கு.
இவ்வாறு அவர் பேசினார்.