டெல்லி, டிச. 26–
டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 30 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
தலைநகர் டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் அங்கு ரெயில் மற்றும் சாலைப் போக்குவரத்துகளின் சேவை, விமான சேவைகள் தடைப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆரஞ்சு எச்சரிக்கை
மேலும், டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக நிலையில் உள்ளது என காற்றின் தரம் குறித்த ஆராய்ச்சி அமைப்பு தெரிவிக்கிறது. அடர்ந்த மூடுபனி காரணமாக வடமாநிலங்களில் ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடும் பனிமூட்டத்தால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் டெல்லியில் இருந்து புறப்படும், டெல்லிக்கு வரும் 30 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக ஓடுபாதை கண்ணுக்கு தெரியாததால் 2 வது நாளாக டெல்லியில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்லியில் இன்றும் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸானது. பனிப்பொழிவு அடர்த்தியாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.