சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
புதுடெல்லி, அக்.21-
பாதாள சாக்கடை துப்புரவு பணியின்போது தொழிலாளர் இறந்தால், அவர்களின் குடும்பத்துக்கு அதிகாரிகள் ரூ.30 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பாதாள சாக்கடை, கழிவுநீர் தொட்டி துப்புரவு பணியின்போது 347 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 40 சதவீதம் பேர் உத்தரபிரதேசம், தமிழ்நாடு மற்றும் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், அரவிந்த்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு அந்த மனுவை விசாரித்தது.
அந்த அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘பாதாள சாக்கடைகளை மனிதர்களை கொண்டு சுத்தம் செய்வதை மத்திய, மாநில அரசுகள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
அவ்வாறு சாக்கடை துப்புரவு பணியின்போது ஒரு தொழிலாளர் இறக்க நேரிட்டால், அவரது குடும்பத்தினருக்கு அரசு அதிகாரிகள்தான் ரூ.30 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். அதேபோல இந்த பணியில் ஒரு தொழிலாளருக்கு நிரந்தர உடல் குறைபாடு ஏற்பட்டால் ரூ.20 லட்சமும், மற்ற உடல் குறைபாடுகளுக்கு ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
மேலும், பாதாள சாக்கடை பணி மரணங்கள் தொடர்பாக அரசுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் சுப்ரீம் கோர்ட் வெளியிட்டுள்ளது. அவை நடைபெறாமல் தடுக்கும் வகையில் அரசு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இதுதொடர்பான வழக்குகளை கண்காணிப்பதில் இருந்து ஐகோர்ட்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.