சென்னை, அக். 9–
உடற்பயிற்சி செய்த கொண்டிருந்த ஜிம் டிரெய்னர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். இவர் ஜிம்மில் டிரெய்னராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக கொரட்டூரில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் தீவிர உடற்பயிற்சி செய்துவந்துள்ளார். அப்போது, திடீரென உடல் சோர்வுடன் காணப்பட்டதால், ஜிம்மில் உள்ள குளியறைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் நீண்ட நேரம் வெளியில் வராததால், அங்குள்ளவர்கள் குளியலறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.