புதுடெல்லி, நவ.3-
2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக அறிவித்த ரிசர்வ் வங்கி, இந்த நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்காக செப்டம்பர் 30ந்தேதி வரை காலக்கெடு வழங்கியது. பின்னர் இது அக்டோபர் 7ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அதன்பிறகும் நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்கள் மூலம் இந்த நோட்டுகளை மக்கள் தங்கள் வங்கிக்கணக்கில் செலுத்தலாம் என அறிவித்தது.
இந்த அலுவலகங்களில் இருந்து தூரத்தில் வசிப்பவர்களுக்கு தற்போது மேலும் ஒரு சலுகை வழங்கப்பட்டு இருக்கிறது. அதாவது, 2,000 ரூபாய் நோட்டுகளை பதிவு தபால் உள்ளிட்ட உறுதி செய்யப்பட்ட வழிகள் மூலமாக மேற்படி அலுவலகங்களுக்கு அனுப்பி மக்கள் தங்கள் வங்கிக்கணக்குகளில் செலுத்துமாறு ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை மக்களுக்கு சிரமம் இன்றி மேற்படி நோட்டுகளை மாற்ற வழிவகுக்கும் என டெல்லி மண்டல இயக்குனர் ரோகித் பி.தாஸ் தெரிவித்தார்.
முன்னதாக புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 97 சதவீத நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு வந்திருப்பதாக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.