இம்பால், அக். 5–
மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்ததையடுத்து அங்கு 2 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் பட்சோய் காவல் நிலையப் பகுதியில் உள்ள நியூ கெய்தெல்மன்பியில் நேற்றிரவு 10 மணியளவில் நடைபெற்றது.
வன்முறை தாக்குதலுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் திரண்ட மைதேயி பெண்களைப் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர். அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கடந்த 5 மாதங்களாக இரு சமூகத்தினரிடையே இன மோதல்கள் நடைபெற்று வருவதையடுத்து அங்கு வன்முறை வெடித்து வருகின்றது. இதில் 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த நிலையில் இன மோதல்கள் முடிவுக்கு வராமல் தொடர்ந்து வருகிறது.