வாழப்பாடி, டிச. 09–
வாழப்பாடி கிழக்குக்காடு அருகே மேம்பாலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் நல்வாய்ப்பாக 5 பேர் உயிர்த் தப்பினார்.
சேலம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு இன்று அதிகாலையில் காரில் சென்றுள்ளார். சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி கிழக்குக்காடு அருகே மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் முன்பகுதியில் தீப்பற்றிக் கொண்டது.
உயிர் தப்பிய 5 பேர்
இதனை அறிந்து சுதாகரித்துக் கொண்ட மணிகண்டன் காரை உடனடியாக நிறுத்தினார். உடனடியாக 5 பேரும் காரில் இருந்து கீழே இறங்கியதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். சில நிமிடங்களில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாழப்பாடி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். எரிந்த காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.