செய்திகள்

வண்டலூர் அருகே மீண்டும் சாலையை கடந்த 3 முதலைகள்

சென்னை, ஜன. 8–-

வண்டலூர் அருகே மீண்டும் 3 முதலைகள் சாலை யை கடந்து சென்றன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னையை அடுத்த வண்டலூர் அருகே நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட ஆலப்பாக்கம், சதானந்தபுரம், நெடுங்குன்றம் ஏரிகளில் ஏராளமான முதலைகள் உள்ளது. இந்த முதலைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அவ்வப்போது குடியிருப்பு பகுதியை நோக்கி வரும் போதெல்லாம் அதனை பொதுமக்கள் பிடித்து வனத்துறை ஊழியர்களிடம் ஒப்படைக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது வாடிக்கையாகும்.

நேற்று முன்தினம் காலை ஆலப்பாக்கம் சாலையில் அந்த பகுதியை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் நடைபயிற்சி மேற்கொண்டனர். அப்போது திடீரென 3 முதலைகள் சாலையை வேகமாக கடந்து சென்றன. இதை பார்த்து நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து அலறியடித்து நாலாப்புறமும் சிதறி ஓடினார்கள்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு இந்த செய்தி ஆலப்பாக்கம் பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. அங்கு திரண்ட பொதுமக்கள் சாலை ஓரம் கால்வாயில் சுற்றி திரிந்த 3 முதலைகளை நீண்டநேரம் தேடி பார்த்தனர். ஆனால் முதலைகள் சிக்கவில்லை, இதுபற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் ஆலப்பாக்கம் சாலை ஓரம் கால்வாய், மற்றும் புதர்களில் முதலைகள் ஏதாவது பதுங்கி இருக்கிறதா? என்று தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

சாலையை கடந்த

8 அடி முதலை

கடந்த டிசம்பர் மாதம் 4-ந்தேதி மிக்ஜம் புயல் மழையின்போது ஆலப்பாக்கம் சாலையில் சுமார் 8 அடி நீளம் உள்ள ஒரு முதலை ஒய்யாரமாக நடந்து சாலையை கடந்தது. கடந்த மாதம் 13-ந்தேதி ஆலப்பாக்கம் எஸ்.எஸ்.எம். நகர் அருகே சாலையோரம் புதரில் மறைந்திருந்த 8 அடி நீளமுள்ள முதலையை வனத்துறை ஊழியர்கள் பிடித்து கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் ஒப்படைத்தனர்.

கடந்த 1-ந் தேதி இரவு ஆலப்பாக்கம் 150 அடி சாலையில் சுமார் 2½ அடி நீளமுள்ள ஒரு முதலை ஊர்ந்து சென்றது. அந்த முதலையை வனத்துறையினர் பிடித்து கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவுக்கு கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலப்பாக்கம் பகுதியில் அடிக்கடி முதலைகள் பொதுமக்களை அச்சுறுத்தி சாலை ஓரங்களில் சுற்றி வருவதால் அதனை பிடிப்பதற்கு வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நெடுங்குன்றம், ஆலப்பாக்கம், சதானந்தபுரம் ஏரியில் உள்ள முதலைகளையும் பிடிப்பதற்கு வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *