சென்னை, டிச. 26–
சுரேஷ் ரெய்னா லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை கொண்டது ஐபிஎல் தொடர். ஐபிஎல் போட்டிகளில் அனல் பறப்பதால் ஒவ்வொரு ஆண்டும் இத்தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில், ஐபிஎல் அணியில் 2 ஆண்டுகள் முன்னதாக புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற எம்.பியுமான கௌதம் கம்பீர் செயல்பட்டு வந்தார். தற்போது அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக மாறியுள்ளார்.
லக்னோ அணியில் ரெய்னா?
இந்த நிலையில் லக்னோ அணிக்கு ஆலோசகராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா, தோனியுடன் இணைந்து பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார்.
மேலும் தோனியை ‘தல’ என அழைப்பது போல, சென்னை அணி ரசிகர்கள் ரெய்னாவை ‘சின்ன தல’ என்று அழைத்து வந்தனர். ஆனால் கொரோனா காலத்தில் துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், ரெய்னா இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் அவர் பாதியில் வெளியேறினார்.
மேலும் சென்ற ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை குறைந்த விலைக்கு கூட ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை என்பது மர்மமாக உள்ளது. இந்நிலையில் லக்னோ அணியின் ஆலோசகராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.