மேயர் ஆர்.பிரியா வழங்கினார்
சென்னை, ஜன.13–
சென்னை மாநகராட்சியில் 20 ஆண்டுகள் மாசற்று பணிபுரிந்துள்ள 113 ஓட்டுனர்களுக்கு மேயர் ஆர்.பிரியா தங்கப்பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை நேற்று ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.
சென்னை மாநகராட்சியில் 20 ஆண்டுகள் மாசற்று பணிபுரிந்துள்ள ஓட்டுனர்களுக்கு இயந்திரப் பொறியியல் துறையின் சார்பில் அவர்களைக் கௌரவிக்கும் விதமாக சிறப்பு பரிசாக 4 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
அதனடிப்படையில், பணிக்காலத்தின்போது வாகனத்தை விபத்தின்றி இயக்கியிருத்தல், வாகனங்களைப் பராமரிக்கும் தன்மை, எரிபொருள் சேமிப்பு, நன்னடத்தை மற்றும் தொடர் பணி வருகை ஆகியவற்றின் அடிப்படையில் 20 ஆண்டுகள் மாசற்று பணிபுரிந்துள்ள 113 ஓட்டுனர்களுக்கு தலா 4 கிராம் தங்கம் என ரூ.34.35 லட்சம் மதிப்பீட்டில் தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் துணைமேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையாளர் (வருவாய்) ஆர்.லலிதா, இணை ஆணையாளர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யாஅறி, நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, வட்டார துணை ஆணையாளர்கள் கே.ஜெ.பிரவீன் குமார், கட்டா ரவி தேஜா மற்றும் தலைமைப் பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.