செய்திகள்

மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கோரிக்கை

புதுடெல்லி, டிச.7-

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.

மிக்ஜாம் புயல் மழை பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தமிழக எம்.பி.க்கள் பலர் பேசினார்கள். அப்போது தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரணத்துக்கு கேட்ட நிதியில் ரூ.5 ஆயிரம் கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றும் நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு, புயல் மழை பாதிப்பு குறித்து பேசினார். அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1.2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் புயல் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுபோன்ற மழை 47 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் பெய்துள்ளது. இதில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு உள்ளது. பல சொத்துகள் நாசம் அடைந்துள்ளன. 17-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆனால் இந்த சூழ்நிலையை மத்திய அரசு தேசிய பேரிடராக இன்னும் அறிவிக்கவில்லை. குறைந்தது 4 அடிக்கு மேல் வெள்ளம் தேங்கி நிற்கிறது. நிவாரண பொருட்களை நேரடியாக கொண்டு செல்ல முடியவில்லை. படகுகள் மூலமே கொண்டு செல்லப்படுகின்றன. சென்னை மற்றும் மற்ற 4 மாவட்டங் களிலும் இதேநிலைதான் உள்ளது.

எனவே குறிப்பிட்ட இந்த பகுதிகளை தேசிய பேரிடர் பாதிப்பு இடங்களாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதைப்போல பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக விரைவாக நிவாரணம் கிடைக்க வேண்டும். அதற்கு உடனடியாக மத்தியக்குழுவை அங்கு அனுப்பி சேத மதிப்புகளை கணக்கிட வேண்டும். அதுபற்றி உடனே மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *