சென்னை, நவ.7-
பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாக லமாக கொண்டாடப்பட இருக்கிறது.தீபாவளி பண்டிகைக்கு மக்கள் தொடர் விடுமுறை எடுத்து, சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால், பண்டிகையை கொண்டாடிவிட்டு உடனடியாக இரவோடு இரவாகவே ஊர் திரும்ப வேண்டிய நிலை இருந்தது. மறுநாளான திங்கட்கிழமை பள்ளி-, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டுமே என்று மாணவர்களும், அலுவலகங்களுக்கு செல்ல வேண்டுமே என்று பணியாளர்களும் யோசித்தனர். அந்த கவலையை போக்கும் வகையில் பள்ளி-–கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 13-ந்தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி கொண்டாடப்படு கிறது. இதையொட்டி, தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு 13-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 18-ந்தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.