சென்னை, அக். 16–
தமிழ்நாட்டில் ஓடும் ஆறு டீசல்–டெமு ரயில்களை அக்டோபர் 31ஆம் தேதியுடன் நிறுத்திவிட்டு, தலா 8 பெட்டிகளை கொண்ட மின்சாரத்தில் இயங்கும் மெமு ரயில்களாக இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்திய ரயில்வேயில் மின்மயமாக்கல் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இதற்கு ஏற்ப, டீசல் இன்ஜின் மூலமாக இயங்கும் டெமு (DEMU–Diesel Electric Multiple Unit) ரயில்களை நீக்கிவிட்டு, மின்சாரத்தில் இயங்கும் மெமு (MEMU–Mainline Electric Multiple Unit) ரயில்களை அறிமுகப்படுத்தப்படுகிறது.
மின்சார ரயில்களைப் பொருத்தவரை, மின்சாரத்தை பயன்படுத்தி குறுகிய மற்றும் நடுத்தர தொலைவுக்கு இயங்கக்கூடிய ரயிலாகும். நகர்ப்புறங்களில் இ.எம்.யூ (EMU–Electric Multiple Unit) என மின்சார ரயில்களாக இயங்குகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் 6 டீசல் ரயில்கள், 2 விரைவு டீசல் ரெயில்கள் ஆகியவற்றை அக்டோபர் 31ஆம் தேதியுடன் நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக மின்சார ரயில்களாக இயக்க ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
எந்தெந்த ரெயில்கள்
திருச்சியில் இருந்து கரூர், ஈரோடு, கோவை வழியாக பாலக்காடுக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (16843), பாலக்காடு-திருச்சிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (16844), திருச்சி-வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் டெமு ரயில் (06840), வேளாங்கண்ணி-திருச்சிக்கு இயக்கப்படும் டெமு ரயில் (06839), நாகப்பட்டினம்-வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் டெமு ரயில் (06841), வேளாங்கண்ணி- நாகப்பட்டினத்துக்கு இயக்கப்படும் டெமு ரயில் (06842), நாகப்பட்டினம்-காரைக்காலுக்கு இயக்கப்படும் டெமு ரயில் (06898), காரைக்கால்-நாகப்பட்டினத்துக்கு இயக்கப்படும் டெமு ரயில் (06897) ஆகிய 6 டெமு ரயில்கள் அக்டோபர் 31ஆம் தேதிக்கு பிறகு ஓடாது.
இந்த ரயில்களுக்கு மாற்றாக மின்சார ரயில்களாக இயக்கப்பட உள்ளன. இந்த மின்சார ரயில்கள் தலா 8 பெட்டிகளை கொண்டதாக இருக்கும். இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.