செய்திகள்

விஜயவாடா பேருந்து நிலையத்தில் விபத்து: நடத்துனர் உள்பட 3 பேர் பலி

விஜயவாடா, நவ. 6–

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பண்டிட் நேரு பேருந்து நிலையத்தில் இன்று காலை நடைபாதை மீது பேருந்து நிலைத்தடுமாறி ஏறி இறங்கியதில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ளது பண்டிட் நேரு பேருந்து நிலையம். விஜயவாடாவிலிருந்து குண்டூர் நோக்கி செல்லும் பேருந்தில் பயணிகள் அமர்ந்திருந்தனர். இதையடுத்து அந்த பேருந்து இன்று காலை 8.30 மணிக்கு புறப்படும் நேரத்தில் டிரைவர் வாகனத்தை இயக்க முயற்சித்தார். அப்போது திடீரென பேருந்தில் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலையத்தின் 12–வது பிளாட்பார்மில் மோதியது.

நடத்துனர் உள்பட 3 பேர் பலி

இந்த விபத்தில் பேருந்து நடத்துநர், சிறிய குழந்தை, பெண் ஆகிய 3 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர். இதில் டிரைவர் பிளாட்பார்மில் இருந்து புறப்பட ரிவர்ஸ் எடுப்பதற்கு பதில் ஆக்ஸிலரேட்டரை அழுத்தி விட்டார். இதனால் பிரேக் பிடிக்காமல் போய்விட்டதை அடுத்து வாகனம் நிலைத்தடுமாறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிளாட்பார்மில் பயணிகள் அமரும் இருக்கைகள் சேதமடைந்துள்ளன. விஜயவாடா பேருந்து நிலையம் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களையும் இணைக்கும் முக்கிய பேருந்து நிலையம் ஆகும். அதிலும் இங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகளில் விஜயவாடாவிலிருந்து குண்டூருக்கு செல்லும் பேருந்து முக்கியமானது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *