செய்திகள்

நிதி பகிர்வில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

சென்னை, அக்.12-

நிதி பகிர்வில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதாக மத்திய அரசு மீது அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழக சட்டசபையில் கடந்த 9ந்தேதி 2023-2024-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் அது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று சட்டசபையில் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விவாதங்களுக்கு பதில் அளித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த துணை மதிப்பீடுகளில், ரூ.2,893.15 கோடிக்கான கூடுதல் நிதி ஒதுக்கவும் கோரப்பட்டிருக்கிறது. இது இந்த ஆண்டிற்கான வரவு – செலவு திட்ட மதிப்பீடுகளின் மொத்த செலவினத்தில் சுமார் 0.70 சதவீதம் மட்டுமே என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இது அரசினுடைய முறையான நிதி மேலாண்மையை பிரதிபலிப்பதாகவும், அதற்கு எடுத்துக்காட்டாகவும் அமைந்திருக்கிறது.

இந்த நிதியாண்டில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் முறையே 10.6 சதவீதம் மற்றும் 13.78 சதவீதம் என ஆண்டுக்காண்டு வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. 30.6.2022 முதல் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு முறை முடிவுற்றதன் விளைவாக, தமிழ்நாடு அரசுக்கு பெருமளவிற்கான வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

மத்திய அரசினுடைய நேரடி வரி விதிப்பில் தமிழ்நாட்டினுடைய பங்களிப்பில் நாம் தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றோம். ஆனால், அந்தப் பங்களிப்பிற்கு நிகராக நாம் வரி பகிர்வினை பெற்றிருக்கிறோமா என்பதைப் பார்த்தால் இல்லை.

உதாரணத்திற்கு, மத்திய அரசிற்கு வரி வருவாயாக தமிழ்நாடு ஒரு ரூபாய் கொடுத்தால், அதற்கு ஈடாக 29 பைசா மட்டுமே நமக்கு திரும்ப கிடைக்கிறது. மாறாக, பா.ஜ.க. ஆளக்கூடிய உத்தரப் பிரதேச மாநிலம் செலுத்தக்கூடிய ஒரு ரூபாய்க்கு திரும்ப அவர்களுக்கு ஈடாக கிடைப்பது 2 ரூபாய் 73 பைசா.

வெண்ணெய் – சுண்ணாம்பு

நிதியாண்டு 2014–2015 முதல் 2021–2022 வரை மத்திய அரசினுடைய நேரடி வரியில் தமிழ்நாட்டினுடைய பங்களிப்பு மட்டும் ரூ.5.16 லட்சம் கோடி. ஆனால், நமக்கு வரிப் பகிர்வாக கிடைத்தது ரூ.2.08 லட்சம் கோடி மட்டும்தான். இதே, பா.ஜ.க. ஆளக்கூடிய மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் நிலைமை வேறாக இருக்கிறது.

உத்தரபிரதேச மாநில பங்களிப்பு ரூ.2.24 லட்சம் கோடியாகத்தான் இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு கிடைத்த வரிப் பகிர்வு என்பது ரூ.9.04 லட்சம் கோடி. இதுதான் ஒரு கண்ணிலே வெண்ணெய்யும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கக்கூடிய மத்திய அரசின் செயல்பாடு.

பேரிடர் நிவாரண நிதியை எடுத்துக்கொண்டால் கூட தமிழ்நாடு கிட்டத்தட்ட 64.65 சதவீதத்தை மட்டும்தான் மத்திய அரசிடமிருந்து பெற முடிகிறது. 2017-ல் இருந்து 2022 வரையுள்ள 5 ஆண்டுகளுக்கு ஜி.எஸ்.டி. மூலமாக வரக்கூடிய வருவாய் இழப்புகளுக்கு, உங்களுக்கு இழப்பீடுகள் அளிக்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால், 5 வருடங்கள் அந்த இழப்பீட்டைப் பெற்றதற்குப் பிறகும் உரிய வளர்ச்சியை மாநிலங்கள் பெற்றிருக்கிறதா என்று சொன்னால் இல்லை.

மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு

நிதி ஒதுக்கவில்லை

2023–2024ல் நமக்கென்று இருக்கின்ற இந்த பாதுகாக்கப்பட்ட வருவாயில் இருந்து, தமிழ்நாட்டிற்கு மட்டும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்டிருக்கின்ற வருவாய் இழப்பு என்பது ரூ.20 ஆயிரம் கோடியாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த இழப்பீடு 2022ல் முடிந்துவிட்டது. 2 ஆண்டுகளுக்கு இந்த இழப்பீட்டினை நீங்கள் நீட்டித்துத்தர வேண்டுமென்று நான் கேட்டபோதும் நீட்டித்துத் தரவில்லை.

இப்போது நகர்ப்புறத்தில் இருக்கின்ற பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தைப் பார்த்தீர்களென்றால், மத்திய அரசாங்கம் கொடுப்பது ஒரு வீட்டிற்கு ரூ.1½ லட்சம் தான். ஆனால், தமிழ்நாடு அரசாங்கம் குறைந்தபட்சம் ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ.7 லட்சம் இன்றைக்கு கொடுக்கின்றது. ஆனால், பேர் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்.

இந்த நொடி வரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ஓர் ஒதுக்கீட்டையும் மத்திய அரசு செய்யவில்லை. மாநில அரசுதான் ஒட்டுமொத்தமான அந்த செலவையும் இன்றைக்கு அதற்காக ஏற்றுக்கொண்டிருக்கிறது.

அதேபோல், கிராமங்களில் வீடுகட்ட மத்திய அரசு கொடுக்கும் தொகை வெறும் ரூ.72 ஆயிரம். மாநில அரசு 1 லட்சத்து 20 ஆயிரம் கொடுக்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் மொத்தத் தொகையில் 70 சதவீதமான, ஒரு வீட்டிற்காக ரூ.1.68 லட்சத்தை தமிழ்நாடு அரசுதான் வழங்குகிறது.

இதுபோலத்தான் ஜல் ஜீவன் திட்டத்தில் பாதிக்கு பாதி வழங்க வேண்டும். ஆனால், மின்சார செலவு, மற்ற செலவுகளான நடைமுறைச் செலவு, பராமரிப்புச் செலவுகளையெல்லாம் எடுத்துக் கொண்டால் 45 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் மத்திய அரசினுடைய பங்களிப்பு, மீதி இருப்பதையெல்லாம் மாநில அரசு கொடுக்கிறது. இதுபோல, வரிசையாக நான் சொல்லமுடியும். ஆக, ஒவ்வொரு காலகட்டத்திலும் மாநில அரசினுடைய நிதி ஆதாரங்களை, மத்திய அரசு தொடர்ச்சியாக வஞ்சித்துக் கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *