திருவனந்தபுரம், ஜன. 13–
மலையான தூர்தர்சன் அரசு தொலைக்காட்சியின் நேரலையில்
மயங்கி விழுந்த அரசு அதிகாரி பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்திய ஒன்றிய அரசின் பிரசார் பாரதி நிறுவனம் மூலமாக பல்வேறு மொழிகளில் தொலைகாட்சி சேனல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் படி, கேரளாவில் மலையாள மொழியில் இயங்கி வரும் தூர்தர்ஷன் சேனலில், விவசாயம் சார்ந்த நேரலை நிகழ்ச்சி ஓடிக்கொண்டு இருந்தது.
உயிரிழந்த அரசு அதிகாரி
இந்த நிகழ்ச்சியில், கேரள விவசாய பல்கலைக்கழகத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றி வரும் அனி எஸ். தாஸ் பங்கேற்று இருந்தார். நேற்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியின்போது விவசாயம் தொடர்பாக கேட்கப்பட்ட பல்வேறு சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் அதிகாரி விளக்கமாக பதிலளித்து கொண்டு இருந்தார்.
அப்போது அதிகாரி தாஸ் திடீரென நேரலையிலேயே மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து பதறிப்போன நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஆசுவாசப்படுத்தியதைத் தொடர்ந்து தொலைக்காட்சி ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தாஸ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். டிவி நேரலையின் போது பேசிக்கொண்டு இருந்தவர் அங்கேயே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகமும் ஏற்படுத்தியது.