டெல்லி, நவ. 20–
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற உள்ள ‘2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வாங் இன்று காலை இந்தியா வந்தடைந்தார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:–
“இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இந்தியாவின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இருதரப்பு அமைச்சர்கள் கூட்டம்
பென்னி வாங் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 2 வது 2+2 அமைச்சர்கள் கூட்டம் மற்றும் 14 வது வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தையிலும் கலந்துகொள்ள உள்ளார். முன்னதாக, ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் நேற்று இந்தியா வந்தார். அவரை குஜராத் முதலமைச்சர் வரவேற்று உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பார்ப்பதற்கு அழைத்துச் சென்றார்.
இன்று நடைபெறும் அமைச்சர்கள் கூட்டத்தில் இவர்களுடன் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.