நாகப்பட்டினம், அக்.15–
போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால் நாகை –- இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து இன்று ரத்துசெய்யப்பட்டு உள்ளது.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு 2 முறை தள்ளி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, நேற்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொலிக்காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கலந்து கொண்டார். அவர், கொடியசைத்து வைத்ததும், கப்பல் போக்குவரத்து தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மத்திய வெளிவிவகார துறை அமைச்சர் ஜெய்சங்கர் காணொலி காட்சி வழியே கலந்து கொண்டார்.
இந்த நிலையில், நாகை- இலங்கை இடையே நேற்று தொடங்கப்பட்ட சொகுசு கப்பல் போக்குவரத்து இன்று ரத்துசெய்யப்பட்டு உள்ளது. போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை காலை மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், இனி திங்கள், புதன், வெள்ளி கிழமைகள் என்று 3 நாட்கள் மட்டும் கப்பல் போக்குவரத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.