மாஸ்கோ, டிச. 10–
கடுமையான அழுத்தங்களுக்கு இடையிலும் இந்திய தேசத்தின் நலனைப் பாதுகாக்க துணிச்சலான முடிவுகளை பிரதமர் மோடி எடுப்பதால் மட்டுமே இந்திய-ரஷ்ய உறவுகள் தொடர்ந்து முன்னேறி வருவதாக ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற ‘ரஷ்யா அழைக்கிறது’ என்ற மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் பேசியதாவது:–
இந்திய மக்கள் மற்றும் தேச நலனுக்கு எதிரான முடிவுகளை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கவோ, அழுத்தம் கொடுக்கவோ மற்றவர்களால் இயலாது. அவருக்கு வெளியில் இருந்து கொடுக்கப்படுகிற அழுத்தங்கள் குறித்து நான் அவருடன் விவாதித்ததில்லை. ஆனால், தேச நலனைப் பாதுகாக்க அவர் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் என்னை வியப்படையச் செய்கிறது.
மேம்பட்டு வரும் ஒத்துழைப்பு
இரு நாடுகளுக்கும் இடையே அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பு மேம்பட்டு வருவதற்கு அவரின் துணிச்சலான முடிவுகளே காரணம் என்றார். ரஷ்ய–உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார ரீதியிலான தடைகளை விதித்த போதிலும் ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது. மேலும், ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது என்று புதின் பேசியுள்ளார்.