திருச்சி, நவ. 21–
திருச்சியில் 4 நகைக் கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள நகைக்கடைகளில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், திருச்சி ஜாபார்ஷா தெருவில் உள்ள 4 நகைக்கடைகளில் நள்ளிரவு முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சின்னக் கடை வீதி, பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு ஐந்து கார்களில் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்து, நேற்று நள்ளிரவு முதல் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமலாக்கதுறை அதிகாரிகள் நகைக்கடைகளில் உள்ள நகைகள் மற்றும் ஆவணங்களை சோதனை செய்து வரும் நிலையில், கடையின் வெளியில் துப்பாக்கி ஏந்திய 10 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், குறிப்பிட்ட இந்த நான்கு கடைகளில் நடத்தப்படும் சோதனைக்கும், சென்னையில் நகைக்கடைகளில் நடத்தப்பட்ட சோதனைக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதை ஒட்டி, அங்கு பாதுகாப்பு பணியில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அமலாக்கத்துறையினருடன், தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி சின்ன மற்றும் பெரிய கடை வீதிகளில் அதிக அளவு நகைகள் விற்பனையாகி வருகிறது. தற்பொழுது அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையால் அப்பகுதியில் உள்ள மற்ற நகைக்கடை உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக இந்த சோதனையில் 6 கார்களில் , 20 அதிகாரிகள், 10 துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.