காவேரிப்பாக்கம், நவ. 21–
சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த போலீஸ்காரர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள வீராணம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் இளங்கோ (வயது 29). காஞ்சிபுரத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு பணி முடித்துவிட்டு வீராணம் புதூருக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
கல்பலாம்பட்டு ஏரி அருகே வாலாஜா – -பனப்பாக்கம் சாலை விரிவாக்கத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் அந்த பள்ளத்தில் மழை நீர் நிரம்பியிருந்தது. இதை கவனிக்காத இளங்கோ நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்தார். பலத்த அடிபட்டதால் மயங்கி தண்ணீரில் மூழ்கினார்.
இதனை விடிய விடிய யாரும் பார்க்கவில்லை. இதனால் போலீஸ்காரர் இளங்கோ சம்பவ இடத்திலேயே இறந்தார். இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் போலீஸ்காரர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து நெமிலி போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சாலை பள்ளத்தில் விழுந்து போலீஸ்காரர் பலியான சம்பவரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.